எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பே இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றே பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம், முதன்முறையாக எடப்பாடியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதிமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களை கைக்குள் போட்டு கட்சியை தன்வசம் ஆக்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றிய அவர், ஜெயலலிதாவை போல ஒற்றைத் தலைமையாகவும் உருவாகிவிட்டார். ஓ.பன்னீர்செல்வமோ பாஜக நமக்கு உதவும் உதவும் என பகல் கனவு கண்டுகொண்டே அனைத்தையும் இழந்துவிட்டார். பாஜகவும் சும்மா இல்லை.. எடப்பாடி தரப்புடன் ஓபிஎஸுக்காக தொடர்ந்து பேசிதான் வந்தது. மேலும், ஓபிஎஸ் – தினகரன் – சசிகலாவை ஓரணியிலும் கொண்டு வந்து இபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுத்ததும். ஆனால் எடப்பாடி மசிவதாக இல்லை.

இந்நிலையில், சென்னையில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு ஓபிஎஸ் அளித்த பதில்களையும் பார்க்கலாம்.

நிருபர்: மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பே ஜூலை மாதம் நீங்கள் மாநாடு நடத்தவுள்ளதாக பேச்சு இருக்கிறதே..

ஓபிஎஸ்: யார் மாநாடு நடத்தினாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் மாநாடு திட்டமிட்டப்படி பிரம்மாண்டமாக நடக்கும். கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதுதொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம்.

நிருபர்: நீங்கள் நடத்தும் மாநாட்டில் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கலந்துகொள்வார்களா?

ஓபிஎஸ்: கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீங்க.. டிடிவி தினகரனுடன் தோழமை உணர்வுடன் இணைந்திருக்கிறோம். அவ்வளவுதான். அவர் தனிக்கட்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் எம்ஜிஆர் உருவாக்கிய தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.

நிருபர்: நீங்கள் நடத்தும் மாநாடு புரட்சி மாநாடாக இருக்குமா அல்லது திமுகவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் போல இருக்குமா?

ஓபிஎஸ்: மாநாடு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் கண்டித்தும் தினந்தோறும் அறிக்கை வெளியிடுபவன் நான் தான். இதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு.

நிருபர்: உங்கள் அணியை திமுகவின் பி டீம் என எடப்பாடி தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே..

ஓபிஎஸ்: இன்று நாட்டில் நடக்கும் அனைத்து விஷயத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் பி டீம் அல்ல.. ஏ டூ இசட் டீம்களாகவே எடப்பாடி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார்.

நிருபர்: எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பாஜக பல முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அவை அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக இருக்கின்றன. உங்களுடன் பாஜக பேசி வருகிறதா? மறைமுகமாக பேசுவது ஏன்?

ஓபிஎஸ்: தேர்தல் சமயங்களில் கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது சகஜம்தான். நேரம் வரும் போது அதை நாங்கள் தெரிவிப்போம். எங்களுடனும்தான் பாஜக நேரடியாக பேசி வருகிறார்கள். நேரம் வரும்போது கூறுவோம். காரியம் ஆக வேண்டும் அல்லவா.. காரியம் கைக்கூடும் போது எல்லாவற்றையும் சொல்கிறோம். அவசரப்படாதீர்கள். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

எடப்பாடியுடன் கூட்டணி: முன்னதாக, தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்துவிட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தை தொண்டர்களாகிய உங்களுக்கு நான் இப்போது அளிக்கிறேன். இனி நமது செயல்பாடு முழுவீச்சில் இருக்கும்” என்றார்.