மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன்

டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன. எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

டென்மார்க்கிற்கு அரசு முறை பயணமாக சென்ற தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்வளத்துறையில் எப்படி சிக்கனத்தை பயன்படுத்துவது?, நீர்வளத்துறையில் நீரை எப்படி பாதுகாப்பது? என்பதில் உலகத்திலேயே முன்னோடியமாக இருப்பது டென்மார்க். டென்மார்க் போல் தமிழகத்தில் நீர்வளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம். இது குறித்து டென்மார்க் அரசிடம் பேச விரும்பினோம். டென்மார்க் நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் நிலைமையை எடுத்து கூறினோம். கனிவாக கேட்டனர். ஒரு வார காலத்தில் டென்மார்க் அதிகாரிகள் சென்னை வர உள்ளனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் பேசி பின்னர் திட்டம் வகுக்கப்படும் என்ற உறுதியுடன் உள்ளோம். டென்மார்க் பயணம் பயனுள்ளதாக இருந்தது. ஆறுகளில் எங்கு பார்த்தாலும் தாமரைகள் பரந்து விரிந்து கிடக்கிறது. அதை கூட டென்மார்க்கில் எடுத்து எருவாக்கி உள்ளனர். அந்த திட்டம் குறித்து தெரிவித்தனர்.

காவிரி நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து உள்ளது. வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பேச முடியாது. பேசினாலும் அது சட்டப்படி தப்பு. அது முடிந்து போன விவகாரம். தமிழ்நாடு முதல்-அமைச்சரை நாளை (இன்று) காலையில் சந்திக்க உள்ளேன். நானே டெல்லி சென்று காவேரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். தமிழக அரசு அனுமதிக்காது எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது. வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அவர்களால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள். ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர். ஏராளமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவர்களை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துகொள்வது தான் இரண்டு அரசுகளின் பொறுப்பு. தமிழ்நாடு அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.