தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது: வைகோ

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் நடை, உடை, பாவனைகள், அவரது செயல்பாடுகளில் எல்லாம் அவர் ஏதோ தன்னை ஒரு பிரிட்டிஷ் காலத்து கவர்னர் போல் நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்திப் பார்க்கலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் அவருடையை பருப்பு வேகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சனாதனத்தால் இந்தியா உருவாகவில்லை. இந்தியா என்ற ஒரு தேசமே முன்பு இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது பல தேசங்களை ஒன்றாக்கி, ஒரே நாடாக உருவாக்கினார்கள். அந்த நிலப்பரப்பிற்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டதே தவிர, சனாதன தர்மத்தால் இந்த நாடு உருவானது என்று சொன்னால் அதை விட பைத்தியக்காரத்தனமான பேச்சு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.