ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல: ஓவைசி

ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3-ம் நாட்களாக மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வு பணியின் போது இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதிக்குள் ஆட்கள் நுழைய தடைவிதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில், ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்று அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது செயற்கை நீரூற்று அமைப்பு. அது சிவலிங்கம் அல்ல. அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறாதது ஏன்?. அந்த இடத்திற்கு சீல் வைப்பது 1991 சட்டத்தின்படி விதிமீறலாகும்’ என்றார்.

ஞானவாபி மசூதி வளாகத்தில் நேற்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வு பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் நேற்று கடைசி கட்ட வீடியோ பதிவு தொடங்கியது. ஆய்வுப்பணி முடிந்த பின் பேசிய ஆய்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஆணையர் கூறுகையில், ‘‘நாளை (இன்று) எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்’’ என்று தெரிவித்தார்.

கள ஆய்வு நடத்த குழு அமைத்ததை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாராணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கள ஆய்வை மே 17ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால் கள ஆய்வுக்கு தற்போது தடை விதிக்க முடியாது. எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜே.கே.மகேஸ்வரி, ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.