டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை: சீமான்

டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறை உயரதிகாரியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பணிச்சுமையோ, வேறு எந்த பிரச்சினையோ இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை உயரதிகாரி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

விஜயகுமாரும் நானும் ரொம்ப நெருக்கம் உறவுக்காரர். எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு நிறைய அழுத்தம் இருந்தது. பணிச்சுமையும் இருந்தது. மிகச்சிறந்த அறிவாளி. எல்லோர் மீது அன்பாக இருப்பார். துணிச்சல்காரர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் ஏன் இப்படி செய்தார் என்று யோசித்து கொண்டிருந்தேன்.

மன தடுமாற்றம் உள்ளவர்கள், கோழை அப்படி யாராவது இருந்தால் கூட பரவாயில்லை. துணிச்சலான காவல்துறை அதிகாரி இப்படி செய்து கொண்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துளி கூட நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை. டிஐஜி நிலையில் இருக்கும் அதிகாரிக்கே இத்தனை அழுத்தம் இருக்கிறது என்றால் சாதாரண காவலர்களுக்கு எப்படி மன அழுத்தம் இருந்திருக்கும். பணிச்சுமை அதிகம் உள்ளது. சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு விடுமுறை விட வேண்டும். விடுமுறை விட்டாலும் ஊதியத்தை பிடித்தம் செய்வதால் பலரும் அதனை விரும்பவில்லை. 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதிக்க வேண்டும்.

விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவோ செலவு வருகிறது. சமாதி கட்டுவதற்கு பல கோடி செலவு செய்கிறார்கள் காவலர்கள் குடும்பத்திற்காக செலவு செய்யலாமே என்றும் சீமான் தெரிவித்தார்.