கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்: நடிகை கஜோல்

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவர் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். அவரது கருத்து சர்ச்சையான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்று பேசுகையில், நம் நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. நாம் நமது மரபுகள் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கி இருக்கிறோம். கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என குறிப்பிட்டார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் கஜோலின் பேச்சுக்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர் முகமது ஜூபைர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இதில் அவர் யாரையும் குறிப்பிடவில்லை, ஆனால் பல பக்தர்கள் கஜோலின் இந்த அறிக்கையை தங்கள் அன்பான தலைவரை அவமதிப்பதாக எடுத்துக் கொண்டனர் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்து கஜோல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.