பணம் படைத்தவர்களே அரசியலில் இருக்க முடியும்: நாராயணன் திருப்பதி

இன்றைய சூழ்நிலையில், பணம் படைத்த கட்சிகளும், பணம் செலவழிக்கும் நபர்களும் தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது கண்கூடு என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

அரசியல் கட்சிகளில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்து வருவது சமுதாய சீர்கேட்டை, கலாச்சார சீரழிவை உண்டாக்குவதோடு சமூக ஒற்றுமையை பாதிப்பதிலும் மிக முக்கிய பங்காற்றுகிறது. ‘எங்கும் பணம், எதிலும் பணம், எல்லாம் பணம்’ என்றாகி விட்ட இன்றைய சூழ்நிலையில், பணம் படைத்த கட்சிகளும், பணம் செலவழிக்கும் நபர்களும் தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது கண்கூடு. கிளை, ஒன்றியம், மாவட்டம், கட்சி தலைமை என அனைத்து மட்டங்களிலும் கோஷ்டி பூசல்கள், சண்டை சச்சரவுகள்,வெட்டு, குத்துக்கள் என அரசியல் வியாபாரம் நாள் தோறும் நடைபெற்று வருகிறது.

வசதி வாய்ப்புகள், கேளிக்கைகள் அதிகரிப்பால், வருமானத்தை விட செலவினங்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு செலவிட சாதாரண தொண்டர்களால் முடிவதில்லை என்பதே கசப்பான உண்மை. கட்சி பணிக்காக ஒரு நாள் தங்களின் நேரத்தை ஒதுக்க வேண்டுமானால் கூட குறைந்தது 1000 ரூபாயை தங்களின் குடும்ப செலவிற்கு ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் சாதாரண, நடுத்தர வர்க்க தொண்டர்கள் உள்ளனர். ஆனால், கட்சி நிகழ்ச்சிகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில், சாதாரண தொண்டர்களாக இருந்த தற்போதைய நிர்வாகிகள் அல்லது மாவட்ட, பகுதி, கிளை செயலாளர்கள் சட்ட விரோதமாக பணமீட்டும் குண்டர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களிடமிருந்தே பணத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலை இன்று நேற்று உருவானதல்ல. கடந்த 50 வருடங்களில் கட்சி தலைமைகளின் தேவைகளால், குற்றப்பின்னணி கொண்டவர்கள், சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி கொண்டிருந்தவர்கள், சமூக விரோதிகள், மணல் கடத்தல் பேர்வழிகள் பலர் கல்வியாளர்களாக, தொழிலதிபர்களாக, அரசியல் தலைவர்களாக உருவாக்கப்பட்டதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய நிலைக்கு காரணம். அன்றைய தலைமைக்கு கட்டுப்பட்டு அல்லது அச்சப்பட்டு அவர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றைய நிலை வேறு. குறுகிய காலத்தில் பணமீட்டும் வேகத்தில், சமூக விரோதிகள் அரசியலை தங்களின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்துகின்றனர். அரசியல் வாதிகளுக்கு துணை நின்ற சமூக விரோத கும்பல்கள், இன்று தங்களை அரசியல்வாதிகளாக முடிசூட்டிக்கொள்கின்றனர்.

‘பணம்! பணம்! பணம்!’ என்ற தாரகமந்திரம் ஒலிக்க, அடிமட்ட தொண்டர்களை, சமூக விரோதிகள் அடித்து, அழித்து, அடக்கி கட்சிகளின் நிர்வாகத்தை தங்களின் கைகளில் வைத்து கொண்டிருக்கின்றனர். ‘அரசியல் ஒரு தொழில்’ என்பது தமிழகத்தில் சர்வசாதாரணமாகி விட்ட நிலையில், கொள்கைகளும், சமூக பொறுப்புணர்வும், சமுதாய சேவை சிந்தனையும் காற்றில் பறக்க விடப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளும், சமூக விரோத செயல்களும், கலாச்சார சீர்கேடுகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கட்சிகளின் வளர்ச்சிக்காக உயிரையே கொடுக்க துணிந்த தொண்டர்களே கட்சிகளின் பலம் என இருந்த காலம் மறைந்து ரௌடிகள், சமூக விரோதிகள், மணல் கடத்தல், மரம் கடத்தல், கனிம வள கடத்தல், நில அபகரிப்பாளர்கள், கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள், நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் கட்சி பதவிகளுக்காக, கட்சிக்காக உயிரையே கொடுக்க துணிந்த அப்பாவி தொண்டர்களின் உயிரையே பறிக்கும் நிலைக்கு பெயர் தான் தமிழக அரசியலின் ‘திராவிட மாடலோ?”. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.