விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனையடுத்து புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து ஒடிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை வீரன் படத்திற்கு பிறகு சண்முக பாண்டியன் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம்தேதி அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.