சென்னை வானொலி-ரெயின்போ பண்பலை இணைப்பு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: ராமதாஸ்

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை ஏ மத்திய அலை வரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இன்று காலை முதல் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 300 கி.மீ. சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த சென்னை அலைவரிசை நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும்போது, அதிகபட்சமாக 50 கி.மீ. சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.

சென்னை வானொலியின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 31-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரசார் பாரதியின் இந்த முடிவு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். எனவே சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.