2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்: பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல் காரணமாக முடங்கியிருந்த இந்திய தொலை தொடர்புதுறை தற்போது தொடர்ந்து முன்னேறி தற்போது 6ஜி என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1997ஆம் ஆண்டில் முதன்முறையாக துவக்கப்பட்டது. இந்நிலையில் டிராய் துவக்கப்பட்டு 25ம் ஆண்டு நிகழ்வு இன்று கொண்டாடப்பட்டது. டிராய் துவக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 5ஜி அலைக்கற்றை சோதனையை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5ஜி தொழில்நுட்பம் பங்காற்றும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, வளர்ச்சியின் வேகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை துவங்க முடியும். 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். ஊழல்களால் முடங்கிய பல்வேறு துறைகளை நாம் மீட்டெடுத்துள்ளோம். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட முன்னெடுப்புகள் இதற்கு காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இது நாட்டில் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் 4 லட்சம் பொது சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று இந்த பொது சேவை மையங்கள் மூலம் நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் கிராம மக்களை சென்றடைகின்றன. இந்த பொதுச் சேவை மையங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது. சமீபத்தில் குஜராத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பழங்குடியினர் வசிக்கும் பகுதியான தாஹோட் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியை சந்தித்தேன்.அவர்கள் பொது சேவை மையத்தின் மூலம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றார்கள் இதுதான் நமது திட்டம்: இவ்வாறு பிரதமர் பேசினார்.