செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 26-ம் தேதி வரை, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தி, அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்ர வர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த மாறுபட்ட தீர்ப்பு மற்றும் வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பு விவரங்களையும் எடுத்துரைத்து வாதிட்டார். மேலும், ‘அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளாக இல்லாத பட்சத்தில், அவர்களால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167-ன் கீழ் யாரையும் கைது செய்து காவலில் எடுக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை நீதிமன்ற காவலுக்கு மட்டும்தான் அனுப்ப முடியும். அதேநேரம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், நீதிமன்ற காவலுக்குகூட அனுப்ப முடியாது. இரண்டில் ஏதாவது ஒன்றைதான் கணக்கில் கொள்ள முடியும். மேலும், செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்ளார். எனவே, அவருக்கு நீதிமன்ற காவல் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு நபரை கைது செய்வது என்பது விசாரிப்பதற்குத் தானே தவிர அவரை வெறுமென நீதிமன்ற காவலில் வைப்பதற்கு கிடையாது. அப்படி காவலில் வைப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை. கைது என்பது ஒரு குறிப்பிட்ட தேவைக்காக தான். இந்த விவகாரத்தில் ஜாமீன் பெறுகிறார்கள் என்றால் கைது செய்த அதிகாரிகளை காவல் துறை அதிகாரிகளாகத்தான் பார்க்க முடியும். இது தொடர்பாக ஏராளமான வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும், 15 நாட்களுக்கு மேலாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் சிகிச்சைக்கு பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நீதிமன்றம் கொடுத்த அதிகாரத்தை எப்படி அவர்களால் மறுத்து பேச முடியும். விசாரணை செய்வது எங்களது கடமை மட்டும் கிடையாது, சட்ட உரிமையும் கூட. அதேவேளையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தில் நீதிமன்ற காவல் என்பது இல்லை. மேலும் , சில சமயங்களில் விசாரணைக்கு வருவதை விட பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்வது சிலருக்கு சுலபமாக இருக்கிறது” என்று வாதிட்டார்.

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சில சமயங்களில் அமலாக்கத் துறை சட்டத்தை மதிப்பதை விட அதை மீறுவது விருப்பமானதாக இருக்கிறது என பதில் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அப்போது, இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படாது என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், இதை நீதிமன்றம் அறிவுறுத்தலாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் 26-ம் தேதி வரை, செந்தில் பாலாஜி விவகாரத்தில், வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.