இலங்கை அதிபரிடம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்: அண்ணாமலை

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை விடுத்தார். மேலும் இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் ரூ. 75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையே, பிரதமர் முன்னுரிமையாகக் கொண்டுள்ளார்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. 1800 ஆண்டு பழமையான சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது. நாகப்பட்டினம் காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாவதற்கு முழுமுதற் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியிருக்கிறார்.