மேற்கு வங்கத்தில் அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்!

மணிப்பூரை போல் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மேற்கு வங்கத்தில் 2 பெண்கள் அரை நிர்வாணப்படுத்தி இழுத்தி செல்லப்பட் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி மக்கள் இடையேயான மோதல் வன்முறையாக மாறிப்போனது. இந்த வன்முறையின் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலித்தது. மணிப்பூர் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் சபை தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் விவாதமின்றி 2 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.

இந்நிலையில் தான் மணிப்பூரை போல் மேற்கு வங்க மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பதாகவும், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 8 ம் தேதி மேற்கு வங்க மாநிலம் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் தக்சின் பஞ்ச்லா பகுதியில் கடந்த 8 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். வாக்குச்சாவடியில் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி ஆடைகளை கிழித்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லை கொடுத்து அவரை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி நேற்று பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி மற்றும் அம்மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க தற்போது 2 பெண்களை அரைநிர்வாணப்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் பெண்களே தாக்கிய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மால்டாவில் உள்ள பகுவாஹாட் மார்க்கெட் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் நின்றனர். அப்போது அந்த 2 பெண்களும் திருடியதாக கூறியுள்ளானர். இதையடுத்து அங்கிருந்த பெண் வியாபாரிகள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் ஏராளமானவர்கள் சுற்றியிருக்க 2 பெண்களின் ஆடைகளை கிழித்து அரைநிர்வாணப்படுத்தி இழுத்து சென்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. வீடியோ வெளியான பிறகு தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் இரு பெண்களும் திருடி சிக்கியதால் மற்ற பெண் வியாபாரிகள் தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் பெண் வியாபாரிகள்தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை” என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தான் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி பாஜக ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛மேற்கு வங்கத்தில் திகில் காட்சி தொடர்கிறது. 2 பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இரக்கமின்றி தாக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் போலீசார் வாய்மூடி மவுனம் காக்கின்றனர். இந்த கொடூர சம்பவம் ஜூலை 19ம் தேதி காலையில் நடந்துள்ளது. மணிப்பூர் சம்பவம் மம்தா பானர்ஜியின் இதயத்தை உடைத்தது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் மம்தா இந்த சம்பவத்தில் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. அவரது சொந்த மாநிலத்தில் நடந்த இந்த காட்டுமிராண்டிதனமான செயலை அவர் கண்டிக்கவில்லை. இதனால் ஏற்படும் வலி, வேதனையை அவர் வெளிப்படுத்தவில்லை. இது ஒரு முதல்வராக அவரது தோல்வியை எடுத்து காட்டுகிறது” என சாடியுள்ளார்.