718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி?: விளக்கம் கோரிய மாநில அரசு!

மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது.

ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் படையிடம் விளக்கம் கோரியுள்ளார்.

ஏற்கெனவே இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தபோதே சட்டவிரோத வருகைகளை ஊக்குவிக்கக்கூடாது. கடுமையான கெடுபிடிகளைக் கடைபிடித்து முறையான பயண ஆவணங்கள் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு மணிப்பூர் மாநில அரசு வலியுறுத்தியிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தோம் என்று ஜோஷி சுட்டிக்காட்டினார்.