ஆரிய மாடலை வீழ்த்தப் போவது திராவிட மாடல் தான்: ஆ. ராசா

மோடி என்ற மதவாத ஆரிய மாடலை வீழ்த்த படையோ, தலைவர்களோ போதாது. மோடி மாடலை வீழ்த்த பெரியாரின் திராவிட மாடல் தான் சரியான ஆயுதம். அது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது” என்று திமுக எம்.பி. ஆ. ராசா பேசினார்.

திமுக பயிற்சி பாசறைக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக எம்.பி. ஆ. ராசா பேசியதாவது:-

இன்று இந்தியாவை பார்த்து உலகமே காரி துப்புகிறது. நம்ம ஊரில் எத்தனையோ ஜாதி வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏழை – பணக்காரன் பாகுபாடு இருக்கிறது. ஆனால், எந்த ஜாதி பெண்ணாக வேண்டுமானால் இருந்து கொள்ளட்டும். ஆனால், அந்தப் பெண்ணை யாராவது அரை நிர்வாணம் ஆக்க முடியுமா? நாம் விட்டுவிடுவோமா? ஜாதி வித்தியாசம் பார்ப்பவர் கூட, வேறொரு ஜாதி பெண்ணுக்கு ஒரு அநீதி நடக்கிறது என்றால் கேள்வி கேட்பார். ஏனென்றால் பெண் என்றால் பேயே இறங்கும். பெண்ணுக்கு கூட மோடி இறங்கவில்லை என்றால் பேயை விட மோசமானவரா மோடி என்ற கேள்வி எழுகிறது.

ஒரு பக்கம் ஊழல்; ஒரு பக்கம் எதேச்சரிகாரம்; மற்றொரு பக்கம் மதவாதம். இந்த மதவாதமும், ஊழலும் சேர்ந்து நமது திமுகவை பார்த்து இது ஊழல் கட்சி, குடும்ப ஆட்சி என்கிறது. ஆமாய்யா குடும்ப ஆட்சிதான். மிசாவிலே கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலே சிறையில் இருந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு, தனது கோபாலபுரம் வீட்டை அடகு வைத்து பணம் அனுப்பிய குடும்பத் தலைவர்தான் எங்கள் கலைஞர். அப்படி பார்த்தால் இது குடும்ப ஆட்சி தான். எங்கள் குடும்பத்தை பார்த்து கேள்வி கேட்கும் யோக்கியதை உனக்கு (பாஜக) கிடையாது.

இந்தியாவிலேயே மோடியை வீழ்த்தக்கூடிய வல்லமை நமது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது. மோடியை எதிர்த்து வட மாநிலங்களில் ஒரு பெரும் படையே திரண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மோடி என்ற மதவாதத்தை வீழ்த்த படை போதாது. தத்துவம்தான் அவசியம். பெரியார், அண்ணா, கலைஞர் புகட்டிய நமது திராவிட தத்துவம் மோடியை வீழ்த்தக்கூடிய சரியாக ஆயுதம். அந்த தத்துவம் இருக்கும் ஒரே இடம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். மோடி எனும் ஆரிய மாடலை பெரியாரின் திராவிட மாடலால் தான் வீழ்த்த முடியும். இவ்வாறு ஆ. ராசா பேசினார்.