அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்!

என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம் தாக்கப்பட்ட நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளை கைவிட வலியுறுத்தி இன்று நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்தின் போது என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டுவிட்டு மறுபுறம் விவசாயத்தை அழித்து வருவதாகவும், நெல் வயல்கள் அழிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும் என்றும், கடலூர் மாவட்டத்தை அழிக்கும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். பின்னர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் என்.எல்.சி நிறுவனத்திற்குள் நுழைவுவதற்காகப் புறப்பட்டனர். என்.எல்.சி நுழைவாயில் நோக்கி புறப்பட்ட பா.மகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவானது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்ககன பாமகவினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸை கைது செய்து ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பாமகவினரை, காவல்துறையினர் தடியடி நடத்தி களைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கல் வீசி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த வேளையில் போலீசார் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இரும்பு தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டன. போலீஸ் வாகனம் மீது கல்வீசப்பட்டது. அதோடு போலீஸ் அதிகாரியின் மண்டை உடைந்ததோடு, 10 பேர் வரை காயமடைந்தனர். மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. அதோடு அன்புமணி ராமதாஸை அதிரடியாக கைது செய்த போலீசார் வேனில் ஏற்றினர். இதனால் ஆக்ரோஷமடைந்த கட்சியினர் போலீஸ் வேனை சூழ்ந்து கொண்டனர். மேலும் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் அவர்கள் தடுத்தனர். இந்த வேளையில் சிலர் முதல்வன் பட பாணியில் போலீஸ் வேனின் முன்புறம் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் வேன் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. போலீஸ் வேனின் முன்பும், பின்னும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் அன்புமணி ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.