சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்: ரஜினிகாந்த்

‘ஜெயிலர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ரஜினிகாந்த், ‘சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்’ என்று குறிப்பிட்டார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்பட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு வந்த ரஜினிகாந்தை ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

‘ஜெயிலர்’ படத்தின் கதையை நெல்சன் என்னிடம் சொல்லும் போது உடனடியாக பிடித்தது. எனவே ஓகே செய்தேன். படம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்த படம் ‘பாட்ஷா’ மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்கெலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இந்த இயக்குனரை மாற்றி விடுங்கள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எதையும் படக்குழு பொருட்படுத்தவில்லை. அதன் எதிரொலிப்பு தான் படம் நன்றாக வந்திருக்கிறது.

என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லைதான். ‘ஹூக்கும்..’ பாடலில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் நீக்க சொன்னேன். பாடல் அற்புதமாக இருந்தது. காவலா பாடலில் தமன்னா அட்டகாசமாக ஆடியிருப்பார். எனக்கு வேலை கம்மிதான் ஒரே ஒரு ஸ்டெப்போடு முடித்திருப்பேன். அந்த பாடலை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகிறார்கள். நெல்சன் நகைச்சுவையாக பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார். படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். ‘காவாலா’ சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க.

அண்ணாத்த படத்திற்கு பின், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம். அண்ணாத்த திரைப்படம் முடிந்ததற்கு பிறகு இவ்வளவு நாள் கேப் ஆனதற்கு காரணம் சரியான கதையும், இயக்குநரும் எனக்கு கிடைக்கவில்லை. சினிமாவிற்கு வந்து தயாரிப்பாளர் அப்பா என்றால், இயக்குநர் அம்மா போன்றவர்கள். இயக்குநர் கையில் தான் ஒரு படத்தின் கதையே உள்ளது. ஒரு இயக்குநரால்தான் படத்தில் நடிப்பவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். அண்ணாத்த படத்திற்கு பிறகு நான் நிறைய கதைகளை கேட்டேன். அவை அனைத்தும் பாட்ஷா, அண்ணாமலை படம் போலவே இருந்தது. இதனால் நான் நிறைய கதைகளை நிராகரித்தேன் அதுவே எனக்கு கஷ்டமாக இருந்தது.

நெல்சனை கதை சொல்ல 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் 11:30 மணிக்கு வரவா என்றார். ஆனால் நெல்சன் 12 மணிக்குத்தான் வந்தார். வந்தவர் உடனே நல்லதாக ஒரு காபி கொடுங்கனு கேட்டார். குடிச்சிட்டு கதையோட ஒன்லைன் சொன்னார். அவர் கதை சொல்ல சொல்ல எனக்கு கதை ரொம்ப பிடித்துவிட்டது. பீஸ்ட் இன்னும்10 நாட் ஷூட்டிங் இருக்கு முடிச்சிட்டு வந்து கதை முழுகதையும் சொல்கிறேன் என்று சொன்னார். எனக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதால், ப்ரோமோ ஷூட் பண்ணி படத்தை அறிவித்தோம்.

குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதுக்காக குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை, எப்போதாவது குடிகள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருமே கஷ்டப்படுவாங்க. இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் தமன்னா, அனிருத், ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணன், மனைவி லதா, மகள் சவுந்தர்யா, நடிகர் நாசர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.