புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவை புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளாக உலகம் பார்க்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அகில பாரதிய சிக்ஷா சமாஜம் மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:-

இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்கும், எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சம முக்கியத்துவம் அளித்து உள்ளது. இளைஞர்களின் திறமையை விட அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். தேசிய கல்வி கொள்கை, பயிற்சியை வழங்குவதுடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது. பல நாடுகள், அங்கு ஐ.ஐ.டி. வளாகங்களை திறக்க எங்களை அணுகுகின்றன.

நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. இலக்கை நோக்கி நாடு முன்னேறி செல்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பாடங்களை மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்டப் புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார். டெல்லியில் உள்ள பழைய பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இரண்டு நாள் அகில பாரதிய சிக்ஷா சமாஜம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.