ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திராநாத் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்த 28 ஆயிரத்து 120 ஓட்டுகள் பெற்ற நிலையில் 76,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளார். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்தார். மிலானியின் மனுவை தள்ளுபடி செய்ய கூறி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ரவீந்திரநாத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மிலானி மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. ரவீந்திரநாத் எம்பி, தேர்தல் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தெரிவித்தது. இருப்பினும் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ரவீந்திரநாத் எம்பியாக தொடர்கிறார்.

இத்தகைய சூழலில் தான் ரவீந்திரநாத் எம்பி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் கூறினால் ரவீந்திராத் எம்பியாக தொடர்வார். மாறாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என உச்சநீதிமன்றம் கூறினால் ரவீந்திராத்தின் எம்பி பதவி காலியாகவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.