7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சாட்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ‘டிஎஸ்-சாட்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும். இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.