எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன்: மாளவிகா மோகனன்

இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன் என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.

மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் படங்களை தேர்வு செய்வது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன். ரூ.500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதில் நான் நடிக்க மாட்டேன். படம் ஓடி வசூலில் சாதனை படைத்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.