முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றிய பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு!

இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று அழைத்ததால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு அலை கிளம்பி இருக்கிறது. அவர் பேசுகையில், “இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சாத்தானின் குழந்தைகளாக அவை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்தில் போய் தேவரே வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்து இருக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ மக்களும்தான். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்.” என்று தெரிவித்தார். ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகத்துக்கு இவர்கள்தான் காரணம். நாம் எங்கு பாவத்தை இவர்களிடம்போய் கொடுப்பது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்கிறார்கள். பெரிய பாவமே அவர்கள்தான். அவர்கள் எங்கு மன்னிப்பது? இன்னும் பாருங்கள், இவர்கள்தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று சொல்வார்கள். திமுகதான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு. 20 வருடங்களாக வெளியில் விடாமல் சிறைக்கு உள்ளேயே வைத்து இருப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு. இஸ்லாமிய மக்களிடம் மறுபடியும் வாக்கு கேட்பார்கள். அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பேசுவார்களா இல்லையா என்று பாருங்கள்” என்றார்.

சீமானின் இந்த பேச்சுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. ஆனால், சீமான் மீண்டும் மீண்டும் தனது கருத்தை தெரிவித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் சிறுபான்மையினர் என்று அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என அவர் கடுமையாக சாடினார். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களிடம் தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டால் அவர்கள் தனக்கு வாக்களிப்பார்களா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு உள்ளானது. தன்னை கண்டித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ராஜ்கிரண் போன்றோரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் சீமான் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.