அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசால் அனைத்து விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர் வாரப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 375 குளங்கள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டதுடன், விவசாயத்திற்குப் போதுமான தண்ணீரும் சேமித்து வைக்கப்பட்டது. இதனால், விவசாயம் மற்றும் குடிதண்ணீர் வழங்குவதில் கன்னியாகுமரி மாவட்டம் தன்னிறைவு பெற்று விளங்கியது. சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பாசனப் பணிகள் நடைபெற்றன.

ஆனால், தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தவிதமான தூர் வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14,250 ஏக்கரில் மட்டும் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு இது மேலும் குறைந்து, சுமார் 10,500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3,750 ஏக்கர் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. 7 பிரதான கால்வாய்களில் தோவாளை சாணல், நாஞ்சில் புத்தனார் சாணல், பத்மநாபபுரம் புத்தனார் சாணல், அனந்தனார் சாணல் ஆகிய 4 சாணல்களில் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கால்வாய்கள் முறையாக தூர் வாரப்படாததால் திறக்கப்பட்ட தண்ணீரும் கடைமடை வரை செல்லவில்லை. இதனால், நேரடியாக கால்வாய் மூலம் பயன்பெறும் பாசன நிலங்கள் நீரின்றி கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோதையாறு நீர் பாசனத் திட்டத்தின் மூலம் 40 அடி மற்றும் அதற்குமேல் அணையில் தண்ணீர் இருந்தால் மட்டுமே ராதாபுரத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்த விதியினை முறையாக கடைபிடித்து, நீர்நிலைகளை நிரப்பி விவசாயிகள் நலனை பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதற்கு மாறாக, விதி முறைகளை கடை பிடிக்காமல் நடப்பாண்டில் ராதாபுரத்திற்கு ஜூன் மாதம் 1-ந் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு, மீண்டும் அரைமணி நேரத்தில் மூடப்பட்டது. இவ்வாறு, விதிகளை மீறி அடிக்கடி செயல்படுவதால், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியான ராதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க, புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு, அம்ருத் திட்டத்தின் மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் இறுதியில் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் நிறைவு பெறவில்லை. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசு, இந்தத் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இனியாவது குடிநீர் பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து, நாள்தோறும் நாகர்கோவில் மக்களுக்கு குடிதண்ணீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.