மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

“காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாமல் பேசுவது” என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நான் இரண்டு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன்.

காவிரியிலிருந்து தண்ணீரை திறந்துவிடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கலந்து கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனாலும், இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை.

இந்த வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவே தான் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்றுதான் தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்துக்கு பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவுக்கும் வரமுடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்துக்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு.

‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு’ என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடு தான் தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த விவரமெல்லாம் தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் முதல்வருக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னால் முதல்வராகவும் இருந்தவருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநில முதல்வரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் பேசி தண்ணீரை பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். இனி பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம்.

இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியாததனம் தான். பாவம், அரசியல் பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத் தான் அவர் அறிக்கை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.