காஷ்மீரில் அமைதி நிலவினால் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்?: ப.சிதம்பரம்

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தின் 370 ஆம் பிரிவை நீக்கிய பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய பாஜக அரசு கொண்டாடுகிறது!

அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது என் நினைவிற்கு வருகிறது: “நாம் விரும்புவது கல்லறையின் அமைதியும் அடிமையின் மௌனமும் அல்ல”

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?

காஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஏன் பூட்டுப் போட்டிருக்கிறார்கள்? இந்தியா முழுவதும் சுதந்திரம் நசுக்கப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் அது மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.