திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த நிகழ்வு எடுத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளப் பக்கங்களில் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள். மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன். அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.