கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ. பகுதியில் பசு மாடு ஒன்று சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்தது. அப்போது பள்ளிக் குழந்தைகள் 2 பேர் பெற்றோருடன் சென்றுகொண்டு இருந்தனர். திடீரென அந்த பசு சிறுமியின் பக்கம் திரும்பி கொம்பால் குத்தி தூக்கி வீசியது. கீழே விழுந்த சிறுமியையும் பசு விடாமல் தாக்கியது. சிறுமியின் தாய் பதறியடித்து பசுக்களின் மீது கற்களை வீசி எரிந்து காப்பாற்ற முயன்றும் பயன்கிடைக்கவில்லை. காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த தாக்குதல் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்து உள்ளது.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள். பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தை முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.