திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு: எடப்பாடி பழனிசாமி!

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக தொழிற்சங்க உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. அதிமுகவில் இணைந்த கட்டுமான தொழிலாளர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சியாக திமுக உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்ப்பதாகத் தெரிவித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கம்பி, ஜல்லி, எம்.சாண்ட், செங்கல் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாத அரசாக திமுக உள்ளது. கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வால் பல்வேறு கட்டடங்கள் பாதியில் நிற்கின்றன. புதிய கட்டடங்கள் வராமல் உள்ளது. கட்டுமானத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த முதியோர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் என்ன அரசுக்கு எதிரானவர்களா? முதியோர் உதவித்தொகையை நிறுத்திய அரசு மக்கள் விரோத அரசாகத்தான் பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, கட்டுமான கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த முதியோர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடியில் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. புதிய தொழில் முதலீடுகள் வரும்போது தான் கட்டுமானத் தொழில் வளர்ச்சி பெறும். அதிமுக அரசு 31 ஆண்டுகள் கால ஆட்சியில் சமூக பொருளாதார வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்து தந்தது. அதிமுக ஆட்சியில் மாதம் ரூ.6 ஆயிரம் இருந்தால் குடும்பம் நடத்தி விடலாம். ஆனால் இப்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. தற்போது ரூ.9 ஆயிரம் இருந்தால் தான் குடும்பம் நடத்தும் அளவுக்கு அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை உரிமைத் தொகை வழங்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், பல்வேறு நிபந்தனைகளை விதித்து குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.

திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சிகரமாக பேசுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே அந்தர் பல்டி அடித்து மாற்றிப் பேசி நிபந்தனை விதித்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் காலமாகிவிட்டது. ஆனால், எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடித்து இப்போது திறந்து வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.