திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்: விஷால்

தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபநாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்தன. ஒருசில ஊடகங்களில் இது செய்தியாக வெளியானது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது பதிவில் விஷால் கூறியிருப்பதாவது:-

பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து மற்றும் அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.