எச்.ராஜாவை கைது செய்யும் விடியாத அரசு: அண்ணாமலை கண்டனம்!

திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குளத்தை திருடும் கும்பலை விட்டுவிட்டு பாதுகாக்க செல்லும் அண்ணன் ராஜா அவர்களை கைது செய்யும் முதல் அரசு நம்முடைய விடியாத அரசாகத்தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இந்த நிலையில் காவல்துறை மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்க்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை, நிகழ்ச்சி இரவு நேரம் நடப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை, பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது. மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30)2 அமலில் இருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாக கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர் .

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடந்து வந்துகொண்டிருந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜாவை பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர். எச். ராஜா உள்ளிட்டோரை அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த நிலையில், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவு 8.340 மணியளவில் எச்.ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் உள்ளிட்டோரை போலீசார் விடுதலை செய்தனர்.

அப்போது பேசிய, எச்.ராஜா,” தான் இந்து மதத்தில் பிறந்தது தவறா? இந்து மதத்தில் மலைகளையும் ஆறுகளையும் குளங்களையும் வழிபட சொல்லி கூறப்பட்டு இருக்கிறது. அதற்காக பழனி வந்த தன்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருக்கின்றனர். பழனிக்கு நெய்க்காரப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தான் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசார் என்னை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை நான் சும்மா விட போவதில்லை. இந்துக்களுக்கான நீதியை கண்டிப்பாக நான் பெற்றுத் தருவேன். மேலும் எவ்வித காரணமும் கூறாமல் என்னை கைது செய்த திண்டுக்கல் போலீசாருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்” எனக் கூறினார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். பாஜக அண்ணாமலை இதுகுறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மூத்த தலைவர் அண்ணன் எச்.ராஜா அவர்கள் பழனி இடும்பன் குளத்தை பாதுகாப்பதற்காக ஆரத்தி திருவிழாவிற்கு செல்லும் வழியில் காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, நம் போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்! குளத்தை திருடும் கும்பலை விட்டுவிட்டு பாதுகாக்க செல்லும் அண்ணன் ராஜா அவர்களை கைது செய்யும் முதல் அரசு நம்முடைய விடியாத அரசாகத்தான் இருக்கும்! ” என பதிவிட்டுள்ளார்.