மாணவன் சின்னதுரையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: திருமாவளவன்

மாணவன் சின்னதுரைக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறிய திருமாவளவன், அவரை வேறு பளளிக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதே பள்ளியில் படித்தால் மீண்டும் இந்த பிரச்சினை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவனை சக மாணவர்கள் சில தினங்களுக்கு முன்பு கொடூரமாக தாக்கினர். இதில் மாணவன் சின்னதுரையும், அவரது தங்கையும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் தாத்தா, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாதிய வன்மத்தால் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவன் சின்னதுரையும், அவரது தங்கையும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாணவன் சின்னதுரையையும், தங்கையையும் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மாணவன் சின்னதுரைக்கும், சிறுமிக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சின்னதுரையின் தங்கைக்கு கிட்டத்தட்ட வீட்டிற்கு செல்லும் அளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவன் சின்னதுரையை பொறுத்தவரை உடலில் 21 இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. குறிப்பாக, வலது கை, கால், தோள்பட்டை ஆகிய இடங்களில் கொடும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு அரிவாளை வைத்து 3 பேரும் மாறி மாறி வெட்டி இருக்கிறார்கள். எனவே சின்னதுரை குணமடைய இன்னும் சில காலம் ஆகும்.

ஒற்றை தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் பிள்ளைகள் இந்த தாக்குலுக்கு உள்ளாகி இருப்பது வேதனையான விஷயம். ஏற்கனவே ஏழ்மையில் இருந்து வரும் சின்னதுரை குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மாணவன் சின்னதுரையையும், தங்கையையும் வேறு பள்ளியில் பாதுகாப்பான சூழலில் படிக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பள்ளியில் படித்தால் மீண்டும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு இருக்கின்றன. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.