6 மாத கைக்குழந்தையை அமைச்சர் காலில் போட்டு கோரிக்கை வைத்த டிரைவர்!

கோவையில் அரசு நிகழ்ச்சியின்போது திடீரென ஓட்டுநர் ஒருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காலில் போட்டு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி மற்றும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அப்போது திடீரென மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். திடீரென ஒருவர் வந்து குழந்தையை காலில் போட்டு காலில் விழுந்ததால் அமைச்சர் சிவசங்கர் பதறிப் போய் அவரைத் தூக்கிவிட்டு என்ன ஏதென விசாரித்தார்.

ஓட்டுநர் கண்ணன் தனது மனைவி முனிதா டெங்கு காய்ச்சல் வந்து உயிரிழந்து விட்டதால், குழந்தைகளை பார்த்துக்கொள்ள சிரமப்படுவதால் தேனிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர் கண்ணன் கூறுகையில், “எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய் தந்தையையும் நான் தான் பார்த்து கொள்கிறேன். எனது பெற்றோர்களுக்கும் வயது முதிர்வு காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமமாக இருப்பதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே என் சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இது குறித்து ஏற்கனவே பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்தேன். அமைச்சர், எனது பிரச்சனை குறித்து விசாரித்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.