திருமாளவனுக்கு போன் போட்டு வாழ்த்திய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவனை போனில் தொடர்பு கொண்டு பேசியதும், அதன் பின்னணி குறித்த விபரமும் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் முதலில் ஈடுபட்டார். அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் வாக்காளர்கள் விபரங்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களை அவர் சேகரித்தார். அதோடு சமீபத்தில் நடிகர் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சென்னை அழைத்து வந்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார். இந்த வேளையில் அவர், ‛‛ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள்” என பேசினார். அவரது இந்த செயல்கள் என்பது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்பதற்கு வலு சேர்த்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று திடீரென்று நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவனை போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொல் திருமாவளவன் நேற்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் நடிகர் விஜய் அவருக்கு போன் செய்து பேசியதோடு, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் தனக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதை தொல் திருமாவளவன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்க்கு நன்றி” என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய், திருமாவளவன் ஆகியோர் தனித்தனியாக இருக்கும் போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.