காங்கிரசின் தலைவர்களுக்கு ‘சிக்கன் சாண்ட்விச்’ தான் முக்கியம்: ஹர்திக் படேல்

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் நேற்று ராஜினாமா செய்தார்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், படிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, 2015ல் போராட்டம் நடத்தினார். இதையடுத்து தேசிய அளவில் கவனம் பெற்ற ஹர்திக் படேல், 2019ல் காங்கிரசில் இணைந்தார். 2020ல் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார்.

சமீபத்தில், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதை மட்டுமே காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது. ராமர் கோவில், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட விவகாரங்களில் பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காத நிலையில், காங்கிரஸ் அவற்றுக்கு முட்டுக்கட்டையாக தான் இருந்துள்ளது. மக்களை தெளிவாக வழிநடத்த தவறிய காரணத்தால் பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

நம் நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்ட போதும், கட்சியை வழிநடத்த தலைமை தேவைப்பட்ட போதும், காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். குஜராத் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு மக்கள் பிரச்னை பற்றி கவலையில்லை. கட்சிக் கூட்டத்தில் தரப்படும், ‘சிக்கன் சாண்ட்விச்’ மீது தான் அவர்களின் கவனம் உள்ளது. டெல்லியில் இருந்து வரும் கட்சி தலைவர்களுக்கு ‘சிக்கன் சாண்ட்விச்’ வழங்கி உபசரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சரியான நேரத்தில் அது டெலிவரி செய்யப்படுகிறது. காங்கிரசை சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அக்கட்சி தொடர்ந்து நாடு மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நான் மூத்த தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம், குஜராத் மக்களின் பிரச்சனைகளை கேட்பதில் தலைவர்களுக்கு உண்மையில் ஆர்வமில்லை. ஆனால் தங்களுடைய மொபைலுக்கு என்ன செய்திகள் வருகின்றன என்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஹர்திக் படேல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து காங்கிரஸ் எம்.பி., சக்திசிங் கோஹில் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இவையெல்லாம் காங்கிரஸில் இருந்து விலகிய ஒருவரின் குற்றச்சாட்டுகள் அல்ல. இவை அனைத்தும் பாஜகவால் எழுதப்பட்டவை. அவர்கள் அதனை சத்தமாக பேசுகிறார்கள். பாஜக முடிவு செய்யாமல் இருந்திருந்தால், அனைவரின் வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. சில நாட்களுக்கு முன்பு தான், ராகுல் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டிருந்தீர்கள். அப்படியிருக்கும் போது, கட்சியின் தலைமைத்துவம் பற்றி பேசினால் எப்படி? தலைவர்களை சந்திக்க விடாமல் அவரை தடுத்தது யார்? எங்களிடம் உள்கட்சி ஜனநாயகம் உள்ளது. உள்கட்சி ஜனநாயகத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே மெல்லிய கோடு தான் உள்ளது. பாஜகவில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.