அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: வைகோ

அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சிவகாசியில் நாரணாபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள லலிதா திருமண மஹால் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மஹாலை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அதிமுக மாநாடு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். அரசியலில் பணம் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. சிவகாசி எம்பியாக இருந்த போது இன்டர்நெட் திட்டம், விருதுநகர் – கொல்லம் அகல ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று செயல்படுத்தினேன். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மதுரையில் செப்டம்பரில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.