நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன்

நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.

நெல்லை மாவட்டம் நான்குனேரியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் சாதி ரீதியான பிரச்னைகளைக் கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது:-

சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து விசிக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏதும் அரியாத பிஞ்சு உள்ளம் கொண்ட குழந்தை தன்னைக் கொலை செய்ய முயன்ற நபர்களைக்கூட மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கிறது. நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சாதிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் நடந்த பிரச்னையை மறைத்துக்கொண்டு மன அழுத்தத்துடன் வீட்டில் இருந்தும்கூட, சமூகத்தில் இதனால் எதும் பிரச்சனை எழுந்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர் வெளியே சொல்லவில்லை.

மாணவர்கள் மீது புகார் கொடுத்த சம்பவத்தை அறிந்து அதனைத் தடுக்காமல் பாதிப்பை ஏற்படுத்திய மாணவர்களின் தாயார் மற்றும் பாட்டி இந்த தாக்குதலுக்கு உதவி செய்துள்ளனர். நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது. ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து சமூக விரோத சம்பவங்களை செய்துவிட்டு எளிதில் வெளியில் செல்ல முடியும் என்ற நிலை 20-ம் நூற்றாண்டிலும் நடக்கிறது. இந்த சமூகம் சாதி வெறியர்களுக்கு சாதகமான அமைப்பாக உள்ளது. சட்டம் காப்பாற்றும், அதிகாரிகள் காப்பாற்றுவர்கள் என்ற நம்பிக்கை சாதி வெறியர்களுக்கு உள்ளது.

இந்தியாவில் மதமாற்றம் நடைபெற சாதிய கோட்பாடுகள்தான் காரணம். சாதிய மதவாத அரசியலைப் பரப்பும் அமைப்புகளை அரசு என்ன செய்யப் போகிறது? சாதிய மதவாத சக்திகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என செயல்படுகிறார்கள்.

யோகி ஆதித்யநாத் காலில் போய் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து இருந்தால்.. ஆட்சி அமைத்து இருந்தால்.. யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனது போல தமிழ்நாடு ஆகியிருக்கும். எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. எவ்வளவு உயர்ந்த இடத்தில் ரஜினிகாந்தை நாம் வைத்திருந்தோம். தலைவர்களை போய் சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினை இல்லை. ஆனால் ரஜினிகாந்த் போய் காலடியில் போய் வணங்குகிறார். அதற்கு என்ன பொருள். யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கும் உறவு.. ஆனால் உங்களைப் (ரஜினிகாந்த்) பற்றி தமிழக மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்து கொண்டு இருந்தார்கள். எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருந்தது என்பதை நீங்கள் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில் தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.