சந்திரயான்-3 வெற்றி: நடிகர் சூர்யா, வைரமுத்து வாழ்த்து!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, வைரமுத்து ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத பகுதியில் இந்திய விண்கலம் தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியலாளர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோ குழுவுக்கு நன்றி . இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தென் துருவச் சந்திரயான் 3 தரையிறக்கத்தில் உங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடுவதில் அனைவரையும் ஒற்றுமையாக உணரச் செய்ததற்காக நன்றி. என தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.

ரஷ்யா அமெரிக்கா சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது.. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்.. இது மானுட வெற்றி என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக இது போதாது என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து நிலா வெறும் துணைக்கோள் நாம் வெற்றி பெற – ஒரு விண்ணுலகமே இருக்கிறது என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.