வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!

சந்திரயான் 3 ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி இந்தியா மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி எல்விஎம் 3எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பலகட்ட பயணங்களாக நிலவின் சுற்றுப் பாதையில் நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து கலத்திலிருந்து கடந்த 17 ஆம் தேதி ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் பிரிந்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டரை சுமுகமக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.44க்கு விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கும் என்றும் 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில், தரையிறங்குவதகாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்தது. சந்திரயான் 3 எப்படி நிலவில் தரையிறங்கப் போகிறது என்பதை காண இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மத வேறுபாடு இன்றி சிறப்பு பிராத்தனைகளை மக்கள் மேற்கொண்டிருந்தனர். விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டப்படி தரையிறக்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள இஸ்ரோ கட்டளை மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை அடுத்து அதில் இருந்து ரோவரும் நிலவில் இறங்கி அதன் ஆய்வு பணியை தொடங்கவுள்ளது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர். நிலவில் அடுத்த 14 நாட்கள் ரோவர் மற்றும் லேண்டர் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்தை மெய்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி காணொலி மூலம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியை தழுவிய நிலையில் அதில் இருந்து பல படிப்பினைகளை கற்று சந்திரயான் 3 திட்டத்தை பெற செய்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தியா நிலவில் உள்ளது” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

காணொலி வழியாக நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த பிரதமர், லேண்டர் தரையிறங்கியதும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தி ஆட்டினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ நான் பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதிலும், என் இதயம் இந்தியாவில்தான் இருக்கிறது. புதிய இந்தியா நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கியது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. வளர்ந்த இந்தியாவுக்கான அடையாளத்தை பறைசாற்றுகிறது. புதிய இந்தியாவின் புதிய எழுச்சியை நாம் கண்டுள்ளோம். புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இது, நாம் எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கும் தருணம். எந்த நாடும் செல்ல முடியாத நிலவின் தென்துருவத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்தியா, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும்போது, இந்த அற்புதமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது. சந்திர பாதையில் நடக்கும் நேரம் வந்து விட்டது. இந்தியா, பூமியில் சபதம் எடுத்தது, சந்திரனில் நிறைவேற்றி விட்டது. சந்திரயான்-3 திட்டம், இந்தியாவுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற நமது அணுகுமுறை உலகமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நமது சந்திரயான் திட்டம், மனிதர்களை மையப்படுத்திய அதே அணுகுமுறையை அடிப்படையாக கொண்டது. ஆகவே, இந்த வெற்றி, அனைத்து மனித இனத்துக்கும் சொந்தமானது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். அடுத்து சூரியனுக்கான பயணத்தை தொடங்குவோம்” என்றார்.