அதிமுக பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரியும், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் என 4 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது, 7 நாட்கள் வாதங்கள் தொடர்ந்து நடந்தன.. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதில், ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின் பன்னீர்செல்வம் தரப்பு, எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு எதுவும் வழங்கப்படாமல், இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு இன்று அதாவது ஆகஸ்ட் 25-ந்தேதி தீர்ப்பு காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் முகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்யப்பட்ட நிலையில், முதல் மாநாட்டை மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி முடித்துள்ளார். ஆனால், அந்த மாநாட்டின் பரபரப்புகளும், சர்ச்சைகளுமே இன்னும் ஓயாத நிலையில், இன்றைய தினம் சென்னை ஹைகோர்ட் என்ன தீர்ப்பு தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையிட்டு வழக்கில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வாசித்தனர். அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அந்தவகையில், பொதுக்குழுவின் முடிவே இறுதியானது என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது எடப்பாடிக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரமாக கருதப்படுவதுடன், ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த பின்னடைவாகவும் இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. அதேசமயம், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா? என்பதுகுறித்து, வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் தனி நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால் அந்த வழக்கு என்பது நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் நிலுவையில் உள்ளது. எனினும், இன்றைய தினம், ஓபிஎஸ்ஸின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதிமுகவுக்கான வெற்றியாக கருதப்படுகிறது. இதையடுத்து, ஓபிஎஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.