மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அஸ்ஸாமிற்கு மாற்றம்!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளை ஆஜர்படுத்துதல், தடுப்புக்காவல், நீதிமன்றக் காவல் மற்றும் நீட்டிப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகளை குவகாத்தியில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் இணைய வழியில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சிபிஐ வழக்குகள் தொடர்பான பிற நபர்கள் இணைய வழியில் ஆஜராக விரும்பவில்லை என்றால், நியமிக்கப்பட்ட குவகாத்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் அமர்வு அனுமதித்துள்ளது. குவகாத்தி நீதிமன்றத்தில் இணைய வழியில் சிபிஐ வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக முறையான இணைய சேவைகளை வழங்குமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 21 அன்று, மணிப்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை மேற்பார்வையிட நீதிபதி கீதா மிட்டல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. சமூக வலைதளங்களில் வைரலான இரண்டு பெண்களின் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், வழக்கின் நியாயமான விசாரணையை உறுதிசெய்ய அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.