முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.