நிலவில் 8 மீட்டர் தூரம் பயணித்த சந்திரயான்- 3 ரோவர்!

சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது. மேலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் ரோவரில் உள்ள இரு அறிவியல் ஆய்வு கருவிகளான LIBS மற்றும் APXS ஆகிய கருவிகள் செயல்படத் தொடங்கின என்றும் லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவையும் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகிறது என்றும் இஸ்ரோ டுவீட் செய்துள்ளது.