டெல்லியில் மருத்துவர்கள் மீது தாக்குதல், வேலை நிறுத்தம்!

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்து அடுத்தத்த நாட்களில் உயிரிழந்தன. இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் உறவினர்கள் பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவர் உட்பட பல மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி ஹார்டிங் மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிரை காக்கும் மருத்துவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் மனித தன்மையற்ற, வன்மையான தாக்குதலானது ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டம் 2008-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மருத்துவமனையின் முக்கிய பகுதிகளில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். ஒரு நோயாளிக்கு ஒரு உறவினர் என்பதை மருத்துவமனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கைளை நிறைவேற்றும் வரை அவசர சேவை உட்பட அனைத்து சேவைகளையும் திரும்ப பெறுவதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.