செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது: சீமான்

ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது என சீமான் கூறியுள்ளார்.

கரூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் கட்சி பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார்.

சீமான் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன், எனக்கு துணையாக நின்று அவரும் சண்டையிட வேண்டும் என்று நினைக்கிறார். கட்சி ஆரம்பித்தால் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினால் வரவேற்பேன். அப்பர் அடிகளார், திருஞானசம்பந்தர் பார்வதி தேவியிடம் ஞானபால் குடித்தவர் என்று குனிந்து வணங்கினார். நானேஇருக்கேன். ரொம்ப பெரிய அறிவாளி, நல்ல பேசுறவன், கெட்டிக்காரனை பார்க்கும் போது எனக்கும் பொறாமை வரும். எனக்கும் வணங்க வேண்டும் என்று தோன்றும். யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது ரஜியின் சொந்த விருப்பம், அவருக்கு அதில் விருப்பம், அவரை தொல்லை செய்யாதீர்கள்., எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜினிகாந்த். வயதில் சிறியவர்கள் அறிவாளியாக இருந்தாலும் காலில் விழுந்தால் அதை ஏற்க வேண்டும். இதனால் ஒரு மனிதன் குற்றவாளி ஆகிவிடுவானா.. ரஜினிகாலில் விழுந்தததால் தான் வெங்காய விலை ஏறியதா தம்பி? அவருக்கு விருப்பமானதை செய்யவிடுங்க.. அவரை சுதந்திரமாக வாழவிடுங்க.. அவருக்கு பிடிச்சிருக்கு இமயமலைக்கு போறாரு.. வணங்குறாரு.. தியானம் பண்றாரு.. அவருக்கு அந்த பாதை பிடிச்சிருக்கு .. அதுல ஒரு அமைதி கிடைக்குதுன்னு நினைக்கிறாரு..

எனக்கு புத்தகங்கள் படிப்பதில் அமைதி கிடைக்கிறது. இசையை ரசிப்பதில் எனக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. அவருக்கு அதில் விருப்பம் இருக்கிறது. எனவே ரஜினியை தொல்லை பண்ண வேண்டாம். ஒரு நடிகன் 73 வயதில் 150 கோடி சம்பளம் வாங்கி, இவ்வளவு பெரிய வியாபாரத்தை கொடுக்கும் நடிகர் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு பெருமை தானே.. அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும். ரஜினிக்கும் யோகிக்கும் முதலில் இருந்தே நட்பு இருந்திருக்கலாம். ரஜினியுடன் நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள். நீங்கள் இதை பேசுறீங்ளே.. நெல்சன் என்கிற என் தம்பி இயக்குனராக இருக்கிறார். ஜெயிலர் டைரக்டர். இவரு என்ன வயசு.. ரஜினி என்ன வயசு.. ஆனால் நெல்சன் வரும்போது, டைரக்டர் வந்துட்டாரு, டைரக்டர் வந்துட்டாருன்னு சொல்லி எழுந்து நிற்பாரு ரஜினி.. அதை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை.. அது மனித மாண்புங்க.. ஒரு இயக்குனர் வெற்றி கொடுத்திருக்கிறாரோ, இல்லையோ, யாரோ ஒருவர்.. ஆனால் இயக்குனரை மதிக்க வேண்டும் என்று மதிப்பு கொடுத்துள்ளார் ரஜினி. அதை நீங்கள் பாராட்டலாமே.. ஒரு தலைமுறைக்கு பாடத்தை கற்பிக்கிறார் அல்லவா? அதை தானே நீங்கள் பார்க்க வேண்டும்.. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை பற்றி இவ்வளவு பேசும் நீங்கள்..நெல்சன் வரும் போது எழுந்து நிற்பது குறித்து யாருமே பேசவில்லையே.. ஏன்?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பிய சீமான், “பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா? கொடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும்” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜி என் தம்பி, அவரை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது, தனிப்பட்ட முறையில் அவர் சிறையில் இருப்பது எனக்கு வருத்தம். அமலாக்கத் துறை தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த விஷயத்திற்கு இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள். உங்கள் வேண்டும் என்றால் ஒன்று.. வேண்டாம் என்றால் ஒன்றா.? குற்றம் நடந்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

காவிரி விவகாரம் குறித்து பேசிய சீமான், “மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு எதற்காக நீங்கள் சென்று வாக்கு கேட்டீர்கள். ஜெயலலிதாவாக இருந்திருந்தால் காவிரியில் கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என அறிவித்திருப்பார்.

தமிழ்நாட்டு நலனுக்கான நீங்கள் நில்லுங்கள். காங்கிரஸை கூட்டணியில் இருந்து தூக்கிவீசுங்கள். தேர்தல் போட்டியிலிருந்தே நான் விலகிக்கொள்கிறேன். ஒரு சீட் கூட வேண்டாம், திமுக கூட்டணிக்கு வந்துவிடுகிறேன், ஆதரவாக இருந்து ஊர் ஊராக சென்று பரப்புரை செய்கிறேன்” என்றவர், நாங்கள் எதையும் எதிர்க்கக் கூடாது, திமுகவை எதிர்த்தால் சங்கி என்று முத்திர குத்துவீர்கள் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.