தமிழகத்தில் பரவியது புது வகை கொரோனா: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஓமிக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான BA4 வகை வைரஸ் இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு புதிய ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள ஒருவருக்கு ஓமிக்ரான் BA 4 வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் BA 4 வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார். தாயாருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது. தாய்க்கும் மகளுக்கும் நடைபெற்ற பரிசோதனையில் உருமாறிய ஓமிக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதியானது. தாயாருக்கு ஓமிக்ரான் BA 2, மகளுக்கு ஓமிக்ரான் BA 4 தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. BA 4 வகை கண்டறியப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட 4 வகையான பெருந்தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை. ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் BA 4 வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தும்.

சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தில் சில இடங்களில் சுவர்கள் பெயர்ந்து வருகின்றன. கிங்ஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் 1000 பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் நடைபெறும். இது ஊழியர்களுக்கு பயனளிக்கும். தமிழ்நாடு முழுவதும் ஜூன் 12ம் தேதி மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மெகா சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இங்கு சீட் வழங்க முடியாது. அவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசு கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.