சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: சிம்பு

சித்தார்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘சித்தா’ படம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பாசிட்டி விமர்சனங்களை குவித்த படம் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கள். இந்தப் படங்களின் இயக்குனர் அருண்குமாரின் புதிய படைப்பாக ‘சித்தா’ உருவாகியுள்ளது. சித்தார்த் இந்தப்படத்தில் நடித்ததுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரின் இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் செய்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ‘சித்தா’ படம் பேசியுள்ளது. கடந்த 28 ஆம் தேதி வெளியான இந்தப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. தனது சித்தா என்ற சித்தப்பாவாக சித்தார்த் நடித்துள்ள நிலையில், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீ நடித்துள்ளார்.

எந்தவிதமான கமர்ஷியலும் இல்லாமல் எதார்த்த சினிமாவாக, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘சித்தா’ வெளியாகி ரசிகர்கள் இடையே பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்தப்படத்துடன் வெளியான சந்திரமுகி 2, இறைவன் படங்களை எல்லாம் தாண்டி சித்தாவிற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ‘சித்தா’ படம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக ‘சித்தா’ படம் இருக்கிறது. மிகவும் தீவிரமான கதையை அனைவருக்கும் புரியும்படி மென்மையாக, தெளிவாக இயக்கியுள்ளார் அருண்குமார். இந்தப்படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்து நடித்ததற்காகவே சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என பதிவிட்டுள்ளார் சிம்பு. அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.