கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்தார். ஒரிசா பாலு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆமைகள் வழித்தடம் குறித்தும் தமிழர்களின் கடல் பயணம் குறித்தும் ஆய்வு செய்து வந்தவர் ஒரிசா பாலு. கடந்த ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. வாய்ப்புற்று நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட ஒரிசா பாலு ஆழ்வார் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

குமரி கண்டம் தொடர்பான ஆய்வையும் ஒரிசா பாலு எழுதிக் கொண்டு இருந்தார். ஒரிசா பாலுவின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் சார்ந்த பல தொல்லியல் நூல்களையும் ஒரிசா பாலு எழுதியிருக்கிறார். ஒரிசா பாலுவின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஒரிசா பாலு உயிரிழந்ததையடுத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரிசா பாலுவின் சில வரிகள், தமிழர்கள் பண்டைக் காலம் தொட்டே நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள். தங்களது வணிகத்தின் மூலமாகவும் படையெடுப்புகளின் வாயிலாகவும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமிழ் அடையாளத்தை பதித்திருக்கிறார்கள். அந்த வகையில் பல சுவடுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் பல நாடுகளில் பல ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பல பழங்குடி இனங்கள் பண்டைய தமிழ்ச் சொற்களை அப்படியே பயில்கிறார்கள்.

நாம் மறந்து போன சங்ககால சொற்களை அவர்கள் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். பண்டைத் தமிழரின் கடல் அறிவு என்பது மிகவும் வியக்கத்தக்கது. பல்வேறு வகையான கப்பல்களை பண்டைக் காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கடலின் நீரோட்டம் அறிந்து கலங்களை செலுத்தி இருக்கிறார்கள். கடல்வாழ் உயிரினமான ஆமைகள் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் வழித்தடங்களை அறிந்து கடல் பயணத்துக்காக அந்த தடங்களை பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று தெரியவருகிறது. ஆழ்கடலில் நான் பல இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறேன். தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிட கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும். அவற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டும். நமது மரபுச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியவர்.