காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி

காவிரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு நீரைப் பெறுவதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா என்று கூறினார்.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் தனித்தீர்மானம் குறித்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தீர்மானம் முழுமையாக இல்லை என்று கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-

காவிரி பிரச்சினை 50 ஆண்டுகால பிரச்சினை. காவிரி நீரை பெறுவதற்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவநதி, தமிழகத்தின் உயிர் நாடி. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி உள்ளது. காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவதுதான் நியாயமானது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும். பயிர்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்பிக்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை. தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால்தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ 13,500 தான் அறிவிக்கப்பட்டுள்ளது அது போதாது. கர்நாடகாவில் தேசிய கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது.

தனித்தீர்மானத்தை ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும். கவனமாக இருந்து தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மனதோடு செயல்பட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். அடுத்த 6 மாத குடிநீர் தேவைக்கு அரசுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டாம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக பேசவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை நான் நிரூபிக்கட்டுமா? ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது. திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் காவிரி குறித்து பல முறை பேசியுள்ளனர். தவறான கருத்துகளை அவையில் பதிவு செய்யக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இறுதியில் காவிரி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இறுதியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார். காவிரி நதிநீர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.