அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் புகார்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் பகீர் புகாரை சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார்.

தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர் சவுக்கு சங்கர். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட தமிழ்நாடு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் உழல் தடுப்புத் துறை அலுவலகத்திற்கு சவுக்கு சங்கர் நேற்று வந்தார். அப்போது, நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை உணவுக்காகவோ அல்லது தேநீர் இடைவேளைக்காகவோ நிறுத்துவதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் இடப்படும். தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம் இதற்கான அறிவிப்பினை மேற்கொள்ளும். அதாவது நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்துள்ள ஒருவர் ஏலம் கேட்டு விண்ணப்பம் அளிப்பார். யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்குதான் வருடந்தோறும் உரிமம் தரப்பட்டது” என்று அறிவித்தார்.

எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தற்போது நெடுஞ்சாலை உணவகங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சவுக்கு சங்கர், “அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் அரசியல் பி.ஏ லூயி கதிரவனின் பினாமியான வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் டெண்டர் விவகாரத்தில் புரோக்கர் போல செயல்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர்களை அணுகும் தங்கவேல், தான் அமைச்சரிடம் பேசி டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி பேரம் பேசியுள்ளார். 29 ஹோட்டல்களுக்கான டெண்டரை ஒரே இடத்தில் அமர்ந்து தங்கவேல் போட்டுள்ளார். மேலும், கூகுள் பே மூலம் நவீன முறையில் தங்கவேல் லஞ்சம் பெற்றுள்ளார்.

அமைச்சரின் பெயரைச் சொல்லி வங்கிப் பரிவர்த்தனை மூலமாக லஞ்சம் வாங்கியுள்ளனர். ஹோட்டல்களுக்கு அனுமதி தர போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், புரோக்கர் மூலமாக லஞ்சம் பெற்றுள்ளார். ஆகவே அமைச்சர் சிவசங்கர், லூயி கதிரவன், தங்கவேலு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சட்டம் மற்றும் இதர சட்டங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளேன். லஞ்ச ஒழிப்புத் துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. எனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவேன்” என்று பேட்டியளித்துள்ளார்.