இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் மூலம் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.

போரால் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.